சனி, 20 பிப்ரவரி, 2016

கடவுள் வாழ்த்து
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி வாவிளை யாட்டுடை யார்அவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே!

ராமாவதாரம் எழுத வந்த கம்பன், கடவுள் வாழ்த்து என்று குறிப்பிட்டு விட்டு, எந்த ஒரு கடவுளையும் மையபடுத்தாமல், இந்த உலகத்தை படைத்தும் காத்தும் பின் அழிக்கும் செயலை சர்வ சாதாரணமாக - விளையாட்டாக செய்யக் கூடியவர் எவரோ அவரது திருவடிகளை சரணடைவோம் என்று பொத்தாம் பொதுவாக கூறி விட்டார் . இதே போலதான் தாயுமானவ சுவாமிகளும்

அங்கிங் கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி
அருளடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
அகிலாண்ட கோடியெல்லாந்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
தழைத்ததெது மனவாக்கினில்
தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந்
தந்தெய்வம் எந்தெய்வமென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
எங்கணும் பெருவழக்காய்
யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
என்றைக்கு முள்ள தெதுஅது
கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது
கருத்திற் கிசைந்ததுவே
கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங்
கருதிஅஞ் சலிசெய்குவாம்.

அங்கும் இங்கும் எங்கும் நீக்கமற நிறைந்து, அருளுடன் கூடிய இன்பமாகிய பேரொளி எது? தன் அருள் வெளிக்குள்ளே அண்ட சராசரங்கள் அத்துணைக்கும் ஆசைவைத்து , ஒவ்வொரு உயிருக்குள்ளும் உணர்வாகி விரிந்திரிப்பது எது ? துன்பம் வரும் போது அனைவரது மனதும் நினைப்பதற்கும்..... வாயினால் மந்திரங்கள் சொல்வதற்கும், எட்டாமல் உயர்ந்து நிற்பது எது ? பல்வேறு மதங்களும் சமயங்களும் இது என்னுடைய தெய்வம் அது என்னுடைய தெய்வம் என்று சண்டை இட்டுக்கொள்ள , இறுதியாக அவரவர் கடவுளாக நின்றது எது ? இப்படியே அனைவரும் சண்டை இட்டுக்கொள்ள இறுதியில் எல்லாவற்றுக்கும் ஒன்றாக இயல்பாக விளங்குவது எது ? இரவு பகல் இல்லாமல் (ராத்திரி பகல்ன்னு இல்லாம) ஓயாமல் நமக்கு அருள் புரிவது எது ? மேற்கண்ட அனைத்தும் ஏதோ ஒரு மவ்னமாக திருவருள் என கருதி அந்த பொருளை வணங்குவோம்